Monday, May 14, 2012



நடப்பு கவிதை

வாழ விடு

07, MAY 2012
Views 175
மாறிக் கொண்டிருக்கும்
காலங்களில்
ஆறிக் கொண்டிருக்கும்
காயங்களில்
கீறிக் கொண்டிருக்கும்
சில கூர் முனைகளைத் தாண்டி
பேசிக் கொண்டிருக்கும்
என் மூச்சு
இன்றும் நின்றுவிடலாம்
ஆகவே
வாழும்வரை வாழ
வழிவிடு என்கிறேன் நீயோ
வலிகளை என் மீது
வாரி எறிகிறாய்
என் சமூகமே.



வாழாத வாழ்க்கை

11, MAY 2012
Views 143
முந்தை நாள்
எஞ்சியதை உண்டு
மிஞ்சிய பணத்தை எண்ணி
எனக்குள் சந்தோஷம்
பலர் கூடிக் களிக்கும்
உறவுகள் வருகை
வெட்டி செலவென்று
எதையோ சொல்லி ஒதுங்கி
வென்று விட்டதாய் புளாங்கிதம்
எங்கோ மலிவென்று
யாரோ சொன்னதை கேட்டு
மணிக்கணக்காய்  செலவிட்டு
ஒற்றை ரூபாய்
சேமித்த  பூரிப்பு
காலையில் பசித்த பசிக்கு
மாலையில் வீடு வந்து
சிக்கனாமாய் புசித்ததில்
ஒரு திருப்தி
அடுத்தவர் செலவைக்கேட்டு
அப்பாடா நமக்கு
அற்றுப்போனது இந்த
மேலதிக செலவு என்று
உள்ளூர ஆனந்தம்
பயணங்களை ஒதுக்கி
மகிழ்வுகளை சுருக்கி
பணத்தை பெருக்கிய
பெருமிதம்
ஆசைப்பட்டதெல்லாம்
அடக்கியே வைத்து விட்டு
சொத்து சேர்த்த பெருமை
தேவைப்பட்டதையெல்லாம்
கொஞ்சநாள் உபயோகம் அவை
வேண்டாம் வேண்டாம் என்று
எல்லோர் தேவைகளையும்
அடகு வைத்து
வாழ்ந்த வாழ்க்கையில் சேர்த்த சொத்து
இன்று பிள்ளைகள் கையில்
தேவைக்கு அதிகமாய்
கிடைத்த போது
கட்டுக்கடங்கா உல்லாசம்
ஊதாரி செலவுகள்
ஒவ்வாத பழக்கங்கள்
நம்மை வருத்தி
கண்ட பலன்
நம்மை வருத்தும்போது
வலி தாங்க முடியாமல்
தினம் மாளாமல்
மனம் போல் வாழ்ந்து விடுங்கள்.
வாழக்கற்றுக் கொடுப்பதை விடுத்து
உங்கள் வாழ்வை தத்துக்கொடுத்து
கெடுத்துவிடாதீர்...



வரம் அம்மா

14, MAY 2012
Views 57
அம்மா
கவலைகள் என்னை முள்
கிளைகளாய் துளைக்கும் போது
உனை கட்டி அழ ஆசைப்படுகிறேன்
நீயில்லை
உயரத்தில் பறந்து நான்
தூரத்தில் வந்தாலும்
துயரத்தில் உன் குரல்
இதயத்துள் இன்னும்
இதமாய் ஒலிக்கிறது
அம்மா
நான் முதல் முதலாக
உச்சரித்த அதே வார்த்தை
சின்ன வலிக்கும்
வாய்விட்டு
கதறி அழைக்கிறேன்
அருகில் நீ
இல்லையென்று தெரிந்தும் கூட.......
என்னை பிரிந்தததில்
உனக்கு ஆனந்த வேதனை
உன்னை பிரிந்ததில் எனக்கு
ஆனந்தம் விடை பெற்றுவிட்டதம்மா
போலி முகங்கள் பல
நான் கண்டுணர்ந்த போது
கபடமில்லா உன் முகம் - என்னை
தோழில் சாய அழைக்கிறது
நிர்ப்பந்தங்கள் சிலவற்றால்
நம் பந்தத்தை நாமே
சிறைக்குள்
அடைத்துவிட்டோம் அம்மா
நான் கண்ணீர் வடிக்கையில்
துடைத்த உன்கரம்
இறைவனிடம் எனக்காக தினம்
கூப்புகின்ற உன் கரம்
எனை அள்ளி அணைத்த உன் கரம்
என் அருகில்  இருந்தாலே அது வரம்
இந்த கவி வரையும் நேரத்தில் நான்
அழுது துடைக்கொண்டேன்
அறிவாயா நீ இந்த உண்மை.

சந்திரிகா அம்மைக்கு

1998

எண்ணி எண்ணி எத்தனையோ நாட்களாக
எனக்குள்ளே புதைந்தபடி செல்லாத ஆசையொன்று
எழுதிட வேண்டும் உனக்கொரு கடிதமதில்
என்னின மக்களின் மனக்குமுறல்களை

நலமென்று நாம் கூற முடியுமா - எம்
நிலையின்று நீ உணர்ந்திடக்கூடுமா?
நினைத்துப்பார் மனித உணர்வுகளுடன் ஒருகணம்
நித்தமும் நிகழ்த்தும் பலிகளையும் அதன் வலிகளையும்

அன்றொருநாள் என் கண்முன்னே கொன்றார்கள்
அன்னையொடு தந்தையையும் எனக்கண்ணீருடன் கூறிடும்
ஆதரவின்றிய குழந்தைகள் எண்ணிக்கை தொடர்கதையிங்கு - உன்
அடக்குமுறைகளுக்கு பிஞ்சுக்குழந்தைகளுமா அழுது துடிக்க வேண்டும்?

துடிப்புடனே பள்ளி சென்று கனவுடனே படித்துவரும்
துள்ளும் இளவயது பிள்ளைகளின் வாழ்வினிலே
துன்பங்கள் பல இழைத்து சோர்ந்திடச்செய்து-எதற்கு
எதற்கு துருப்பிடிக்க வைக்கிறாய் இவர்கள் எதிர்காலத்தை?

அலைபாயும் கடலில் தமிழன் அடிபதிக்க தடையெதற்கு
அனுமதியில்லையா எம் நிலமதில் குடியிருக்கவும் பயிர்விதைக்கவும்
அநியாய முறையில் எங்கள் உரிமைகள் பறிப்பு
அரசாள்பவர்களே என்று தணியும் எம்மீது உங்கள் கொதிப்பு

எங்கள் பத்திரிகையின் பக்கங்களும் செய்திகளும் இயம்புவது
எங்கெல்லாம் குண்டுவீழ்ந்து எத்தனைபேர் இன்றுபலி
எங்கெங்கு பெண்கள் கிருஷாந்தி ஆனார்கள் என்பவைதான்
என்றிதற்கு முற்றுப்புள்ளி தெரியவில்லை இது எமக்கு

நாட்டை வளம்படுத்த என்று நீ நாடகமிட்டு
நாடு நாடாய் பணம் வேண்டி போடுகிறாய் எம்மில் குண்டு
நம் நாட்டிலேயே அகதியாகி நிலமிழந்து நிலைகுலைந்து
நாளாந்தம் பயத்தோடு பதைப்புடனே வாழுமெமக்கு வழி ஏது?

உலக நாடுகளும் ஊமையாகி போனதால்
உன் பிழைகள் இன்று நியாயம் ஆனதா?
உயிர் பிழைக்க மருந்தில்லை உறங்குகிறது உண்மை
உந்தன் ஆட்சியில் படும்துயர் முடியுமா எழுதி

ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டினால்
ஒவ்வொரு சோகம் குடிகொண்டு இருக்க
ஒன்றும் தெரியாத பாவைபோல் அலரி மாளிகையில் நீ
ஒருமுறையேனும் நிதானித்து இதையிட்டு யோசி

தெரியாத மொழியில் ஆட்சி நடத்தி
திணறடிக்கிறாய் மூச்சு எம்தமிழ் மொழிதனை
தயவுடன் ஒருமுறை தட்டிப்பாருன் மனச்சாட்சியை
தமிழ்த்தலைமுறை ஒருமுறையும் இல்லை உனக்கடிமை

விரைவில் ஒருமுறை வடபகுதிக்கு வருகை தா
வரும்போது மறக்காமல் உன் மகனையும் கூட்டிவா
வியக்காதே எதுக்கென்று செம்மணிக்குள் புதைக்க
விளங்கும் அதன்பின்பு உனக்கந்த வேதனை

எம் இனிய தாசம் ஒருமுறை அமைதியில் சிரிக்க
எம் மனம் எவ்வளவோ ஆசைப்படுகிறது -நீ
ஏவிவிட்டு உன் படைகளை சேதமாக்கியே பார்க்கிறாய் -ஆனால்
எரியும் மனதுடன் உலவுகிறது வேங்கைக்கூட்டம் கவனம்

பயங்கரச்செய்திகள் அபாயக்குரல்கள்
பாலாத்காரம் சாட்சிகள் இல்லாத சாவுகள்
பாதை தெரியாத வாழ்க்கை ஓட்டம் இங்கு
பாவிகளின் வெறியாட்டமோ தாங்கமுடியவில்லை

உன்படைகளின்று மோதுகிறது பச்சிளம்குழந்தைகளுடன்
உண்மையில் வீழ்த்தப்படுவது அப்பாவி மக்கள்
உனக்கெதுக்கிந்த ஆணவம் வென்றுகொண்டிருக்கிறாய் என்றா?
உதிர்கின்ற பூக்களாகி மக்களுக்காக உன் எதிரியாகினர் புலிகள்

வருகின்ற காலமதில் நீ பாடம் படிப்பாய்
விரிகின்ற போரில் நீயதை உணரும் நேரம் அருகில்
விளங்கத்தான் போகிறது உனக்கப்போது
விடுதலை என்பதற்கு விலை என்ன என்று

இத்துடன் நான் முடிக்குமுன்னர்
இடிக்கப்பட்ட கோயிலின் கையுடைந்த கடவுளை
இரக்கத்துடன் வேண்டிக்கொள்வது என்னவெனில்
இக்கடிதம் அனுப்புவதற்கு குன்றுகுழி வீதியினில்

தங்கு தடை தாண்டிநான் போகும் போது
திரும்பி உயிருடன் வரவேண்டும் என மிகுந்த சிரமத்துடன்
திருந்தாத உனக்கு அனுப்புகிறேன் கடிதம்
தயவு செய்து புரிந்து கொள்வாயா?

கண்டிப்பாய் நீயதனைக்கண்டு கொள்ள மாட்டாய்
குப்பையிலே போகுமென்று நிச்சயமாய் தெரியும்
கேலியாகிப்போனதல்ல இக்கடிதம்
கடிதமாகி போனதுதான் எம் வாழ்க்கை
சுரேன் செல்லையா [சுரேஜினிபாலகுமாரன்]

Thursday, May 10, 2012




ஏக்கம்

விரித்த சிறகு
வலிப்பதெதற்கு -என்
தேசமின்று
தூரமாகிப்போனதா?







காதலி

என்னை உறங்கவிடு
நிஜங்கள் கனவாகிப்போனது
வலிக்க -என்
கனவிலும் வந்து
உறுத்தாதே.
என்னோடு நிலைக்க
மறுத்த -உன்
தடங்களை அழிக்கவிடு

Wednesday, May 9, 2012


இருளின் பிடியில் அலறும் தேசத்தை நோக்கி......



எழில் கொஞ்சும் இயற்கை வளம்
எனை ஈன்றெடுத்த அன்னை நிலம்
விழி காண முடியவில்லை இன்று
விதியை எண்ணி வருந்துகிறேன் நொந்து
பழி வந்து சேர்ந்ததுவோ எனக்கு
பகட்டாக வாழப்பறந்தவன் என்று
களிப்போடு வாழ்வில்லை நான் இங்கு
கனன்று எரிகிறது என் நெஞ்சு
.


பரந்த வானின் நிலவின் ஒளியில்
படுக்க வேண்டும் பாய்விரித்து மரநிழலில்
விடிந்ததென்று சேவல் கூவும் இன்பம்
வித விதமாய் ஒலியெழுப்பும் அலாரமிது துன்பம்
செறிந்த மரங்களூடே வீசும் காற்றை
செத்து மடியுமுன் ஏற்க வேண்டும் என் சுவாசப்பை
விரிந்து செல்கிறது மண்ணில் கால்பதிக்கும் ஆசை
விம்மி அழுகிறேன் கேட்கவில்லை ஓசை
.

பலநாள் ஆசைகள் சுடராய் எரிந்தது
பலனாய் நெடுங்கனவுதான் வந்தது
இதுநாள்வரையில் உறங்கிய ஆசைகள்
இதமாய் நெஞ்சில் உதயம் ஆனது
தலைநகரில் கால்பதித்தேன் புல்லரித்தது உடல்
தமிழ் முகங்களைத்தேடினேன் உடன்
தொலைவில் ஓரிருவர் சிரிப்பைத்தொலைத்த முகம்
தொக்கி நின்றது அதில் பெரும் பயம்.

.

சிறைவாழ் தமிழ்ர்கள் பலபேர் - இங்கு
சிறுகுற்றம் புரியவில்லை விடுதலைதான் என்று?
மறைந்து வாழ்ந்தனர் நம்மக்கள்- இம்
மண்ணில் தமிழ்ராய் பிறந்ததுதான் அவர் குற்றம்
கொலை மலிந்து உயிர்கள் தொலைந்தது
கொடுமையது தலை விரித்து தாண்டவம் ஆடியது
தடை உத்தரவு திடீரெனப் பிறந்தது
தடல்புடல் தேடலோடு கைதுகள் தொடர்ந்தது.
.

சோதனைகள் பலகடந்து நான் சென்றேன் யாழிற்கு
சோலையாக இருந்தமண் கிடந்ததே பாழாக
உறவுகள் கண்டேன் இதுவென்ன உருவோ
உடல்மெலிவு சகிக்கவில்லை ஊனிழந்த நிலையோ
சித்திமகள் சித்திரவதையில் வாழ்விழந்ததேனோ
சிறகொடிந்த பறவைகளாய் வாழுவோர் எத்தனையோ?
நித்தம் இங்கு நடக்கும் நிந்தனையால்
நிம்மதியை இழ்ந்த வண்ணம் எம்மக்கள்.

.

காணவில்லை காணவில்லை என்மகனை என்று
கதறியழும் தாயவளின் கண்ணீரைக்கண்டு
தாளவில்லை பதைபதைத்தேன் கொடுமைகளை எண்ணி
தாய்க்குலத்தை பிழியும் துயர் மறைவதெப்போ மண்ணில்
பாடசாலை சென்றபிள்ளை பிணமாகப் பற்றைக்குள்
பாவிகளின் கொடுமைகளால் பலவுயிர்கள் மூடு கிண்ற்றுக்குள்
வீதிகளில் தடைவிதித்து இடைமறிக்க நடை பயில வேண்டும்
வீணர்களால் பிஞ்சுகளும் வயோதிபமும்கூட மிஞ்சியது இல்லை.
.




செம்மணியில் புகைகிறது என்போன்ற உயிர்கள்
செவிமடுக்க யாருமில்லை வெறிபிடித்த அரச நரிகள்
பிள்ளையின் வளர்ச்சி கண்டு தாயழுதாள் ஏனோ?
பிடித்துதின்னும் அரக்கர்களின் பயம்தானோ
அரசபீடம் ஏறுதற்கு அம்மை போட்ட போடு
அடுத்த நிமிடம் அதை மறந்து பிறதிட்டங்களோடு
செம்மையான அடி உதைகள் கற்பழிப்பு சூடு
செய்திகளை மறைத்து நல்லாட்சி எனும் பகட்டு.
.

இரவுவேளை தலைகாட்ட முடியாது வெளியில்
இளையவர்கள் வாழும் வீட்டில் எழுப்பிவிட்டு நிரலில்
பரவி நின்று பேசுவார்கள் தம்மொழியில்
பகலாகுமுன்பே கைது தெரியாது வெளியில்
துரவுகள் கிணறுகள் மண்ணைத்தூர்க்கும்
துருவி ஆராய யார் வருவார் இங்கு
தீர்வுப்பொதியில் இன்னுமென்ன திட்டங்களோ
தீராத எம் சுமையை எடுத்து வைப்பது எப்பொதியில்?

.

பலத்த அழிவுகள் இரத்த சிதறல்கள் பொறுக்க முடியாமல்
பதைத்து எழுந்த வேங்கைகள் பலபேர் - தம்
இனத்தை அழிக்கும் கொடுமைகள் மறைய
இளமை வாழ்வை களைந்து எறிந்து
உதைக்கும் எதிரியை சிதைப்பேன் என்று
உரமோடு நிமிர்ந்த தலைவன் செல்வங்கள்
விடியலை நோக்கி போரிடும் படையை
விட்டுவிலகி நானும் சுநலமாய் வாழலாமோ?
.

விழித்துப்பார்த்தேன் உணர்ச்சிவசத்தில்
விலகிப்போனது இரவின் கனவு
வேலைக்குப்போகவேண்டும் சொன்னது என் மனது
வேறாகிப்போனதுவோ என் மண்ணின் கனவு
இல்லை.. இல்லை ...வேராகிப்போனது நினைவு
இயந்திர வாழ்க்கைக்கு நடைபயின்றேன்
திசைமாறிப்போகுமோ எந்தன் மோகம்
தினம் மோதுதே தேசத்தின் ராகம்.

சுரேஜினி பாலகுமாரன் [சுரேன் செல்லையா]